Wednesday, February 29, 2012

அதனினும் இனிது...1..///ஆத்மார்த்தி\\\\...

முகப்புத்தகத்தை நினைத்தால் சிரிப்பாக வருகிறது.என்ன மாதிரியான வஸ்து என்றே தெரியாமல் இதன் ஆழ அகலங்கள் ஏதும் புரியாமல் தனக்கென ஒரு கணக்கை ஆரம்பிக்கிறோம்.மெல்ல அதன் சாதகங்களுக்குள் சிக்குண்டு  திடீரென்று திறந்துவிடப்பட்ட புத்துலகமாய் குதூகலிக்கிறோம். பலருக்கு நாம் நட்புக்கோரிக்கை விடுத்து பலரும் நம்மை நாடி,முதல் ஆறுமாதங்கள் எல்லாம் நன்றாய்த் தான் செல்கிறது.ஒவ்வொரு நாளையும் முகப்புத்தகம் தின்னுகிற சேதி அறியாதவரைக்கும் அது வரமாய் மிளிர்கிறது.அதுவே சாபமென உறைக்கையில் வெகுதூரம் தாண்டிச்சென்ற பயணம்..தனி உரையாடல்களின் மூலமாகவும் ரசனை பரிவர்த்தனைகளான லைக் மற்றும் கமெண்ட் களில் இருந்தும் சிலபலர் நமக்கு நெருக்கமான தோழதோழியராக மாறிய பிறகு,காரணமறியாத ஒரு மன அழுத்தம் உண்டாகத் துவங்குகிறது. தின நடவடிக்கைகள் குறைந்து ,நடமாட்டங்கள் சுருங்கி,கணிணியே கண்கண்ட சைத்தான் என்றதன் விளைவு,கைப் பற்றிய கரடிக்குத் தலையைத் தின்னக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம்.சுடுகிறது.

                            நேரங்கொத்திகளில் தலையாயது முகப்புத்தகம்.இதற்கு முன்வரை இணையத்தில் தனித்தனியாக இருந்த தகவல் பரிமாற்றப் பயன்பாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒற்றை ஆக்டோபசின் பல மழுமழு கரங்களாய் மனிதர்களைப் பீடித்துவைக்கின்றன.அதில் இருந்து விலகிவெளிப்பட்டு தப்பித்துவிட்டவர்கள் வெகு சிலரே..பிரபலமானவர்கள் சிலர் எப்படி முகப்புத்தகத்தில் இருந்து விடுபடுவது என்று நிசமாகவே தெரியாமல் திகார் ராசா போல் விழிப்பதும் அவ்வப்பொழுது டீ ஆக்டிவேட் செய்வதும் ஆக்டிவேட் செய்வதுமாய் விளையாடுவதும் நடக்கிறது.இதில் அறிக்கை விட்டு முகப்புத்தகத்தை நீங்கிச்சென்ற சிலபலர் மீண்டும் வந்து கடையைத் திறப்பதும் நடக்கிறது.முகப்பித்தகம் என்றும் ஃபேஸ்புக்கின் அடிமைகள் என்றும் நான் கூட அடிக்கடி கமெண்ட்கள் போடுவதும் மூடித்திறப்பதுமாக இருந்துவருகிறேன்.
            ஒரே வழிதான்.முதல் சிகரட்டைப் பிடிக்காமலே இருப்பது தான் சிகரட்டை விடுவதற்கான வழி என்று என் முப்பத்தைந்தாவது குருநாதர் முனீஷ் ஜேக்சன் சொன்னது இதற்கும் பொருந்தும்.முகப்புத்தகத்தினுள் நுழையாமல் இருப்பதே அதை விட்டு நீங்குவதற்கான ஒரே வழி என்று தோன்றுகிறது.இதைத்தான் வீரப்பா அன்றே சுட்டினார் போலும்.."நாடும் நகரமும் நாஷமாய்ப் போகட்டும்"என்று..
                          வாழ்க்கை என்றொரு படம்.ஏவிஎம் எடுத்ததல்ல.அதற்குப் பின்னால் கலர்காலத்தில் ராஜசேகர் இயக்கத்தில் சிவாஜியும் அம்பிகாவும் நடித்தது.சிவாஜி தன் அடுத்த தலைமுறை நாயகர்களுடனான களமாடலில் அவருக்கும் பேரும் புகழும் பெற்றுத்தந்த படங்கள் ஒன்றிரண்டல்ல.பல இருக்கிறது.சந்திப்பு,திரிசூலம்,கவரிமான்,சங்கிலி,அந்த வரிசையில் வாழ்க்கை.அதில் பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்ட நிலைக்கு வந்த பிறகு போராடி பெருவெற்றி அடையும் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இணையாக வரும் அம்பிகாவும் சிவாஜியோடு நடிக்கிறோம் என்ற பயபக்தியோடு அடங்கி ஒடுங்கியிருப்பார்.
                இதனை எழுதுவதற்கு சிவாஜித்துவம் காரணமல்ல.ராஜ் சீதாராம் என்ற அதி அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர்.தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் என்றாலும் அதிசுத்தமாக தமிழை உச்சரிப்பது ராஜின் சிறப்பு.(குலுவாலிலே என்று சங்கே முழங்கும் உதித் நாராயணனை உதைத்தனுப்பலாம் இவரிடம்).அவர் பாடிய " ""மெல்ல மெல்ல என்னைத் தொட்டு மன்மதன் தன் வேலையை"..என்ற பாடல் இளையராஜாவின் சாகாவரப் பாடல்களில் ஒன்று.அதற்கு படத்தில் ரவீந்தரும் சில்க் ஸ்மிதாவும் ஜிகினா ஆடைகள் அணிந்து செஸ் கட்டங்கள் போன்ற வடிவலங்காரம் கொண்ட ஒளிரும் தரையில் குழுக் கன்னிகையருடனும் கண்ணாளர்களுடனும் ஆடியிருக்கும் ஆட்டம் அந்தப் படம் வெளியான காலகட்டத்தோடு கரைந்து கலந்து காணாமற்போயிற்று.

            அந்தப் பாடல் மட்டும் இன்றைக்கு வரை மாறி மாறி வாழ்ந்து கொண்டிருப்பது முரண்சுவை.பல்லவி அனுபல்லவி(தமிழிலும் தெலுங்கிலும் வெவ்வேறு பேர்களில் வரவும் செய்தது.)பிறகு யுவன் ஷங்கரால் சர்வம் படத்திலும் பயன்படுத்தப் பட்டது.ராஜ் சீதாராமின் மறக்க முடியாத பாடல்களில் மற்றொன்று வா இந்தப் பக்கம் படத்தில் (பிரதாப் மற்றும் உமாபரணி நடித்தது) "ஆனந்த தாகம் இவள் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ..."என்ற ஒரு பாடல்.ராஜ் சீதாராம் பாடல்கள் குறித்து மேல் அதிகத் தகவல்கள் அளுக்கும் என்பர்களுக்கு ஏழு கொண்டல வாடாவிடம் நல்வாழ்க்கை தரச்சொல்லிப் பரிந்துரைக்க \உத்தேசம்.
                         சில விஷயங்கள் ஏன் எதற்கென்று தெரியாமலே மனசில் ஆழமாய்ப் பதிந்துவிடுவதும்,அதன் பிறகு அதனிஷ்டத்துக்கு ஞாபகம் வந்து கழுத்தறுப்பதும் என்ன நியாயம் என்று தெரியவில்லை.வடைமாலை என்றொரு படம்.தூரத்து இடிமுழக்கம் என்றொரு படம்,முதல் மரியாதை வரை(அதில் வருகிற அருணா மரணக் காட்சி) சிறுவயதில் மனசில் ஆழமாய்ப் பதிந்தவை.அப்போதெல்லாம் இந்தப் படங்களில் ஏதேனும் ஒன்று நினைவுக்கு வந்தால் வீட்டுக்கு வெளியே உச்சா போகக் கூட யாரையாவது துணைக்கு அழைப்பேன்.யாராவது வந்தே ஆகவேண்டும்.பின்னாட்களில் பஞ்சமா பாதகங்களில் ஒன்றிரண்டு தவிர்த்து சகலத்தையும் நானே செய்துவிடுகிறவனாக வரப்போகிறேன் என்று அப்போது எனக்கும் தெரியாது.

                இன்றைக்கும் அந்த படங்களின் டீவீடீக்கள் எனது வீடியோ லைப்ரரியில் இருக்கின்றன.குவிண்டைன் டாரண்டினோ படங்கள் மிரர் மாதிரியான படங்கள் வேம்பயர் முதற்கொண்டு கொடூரங்களை எல்லாம் பார்க்க முடிகிறது.வடைமாலை இத்யாதிகளை ஏன் பார்ப்பதில்லை என்று யோசிக்கையில் ஒன்று தான் புரிகிறது.எனக்குள் இருக்கும் சிறுவனுக்கு அந்தப் படங்களைப் பிடிக்காது என்றதால் எச்சரிக்கையாய் அவற்றைத் தவிர்க்கிறேனோ என்னவோ..?

                                      ஏன் அமிர்தவர்ஷினி ராகத்தில் திரைப்படப் பாடல்கள் மிகமிக குறைவாகவே இருக்கின்றன..?எனக்குத் தெரிந்த பாகவதர் நாட் ரீச்சபிளில் இருக்கிறார்.பதில் தெரிந்தால் எனக்கு உதவலாம்..
   கீழ்க்கண்ட பாடல்கள் தமிழில் அமிர்தவர்ஷினி ராகத்தில் அமைந்தவை.
   1.காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லி சொல்லி (மல்லு வேட்டி மைனர்)
   2.ஆடல் கலையே தேவன் தந்தது (ராகவேந்திரர்)
   3.தூங்காத விழிகள் ரெண்டு (அக்னி நட்சத்திரம்)
   4.இப்போதென்ன தேவை (மக்கள் ஆட்சி)
     நாலும் இளையராஜா இசை அமைத்தவை.(தயவு செய்து அக்னி நட்சத்திரம் படத்தின் தெலுங்கு மலையாள டப்பிங் பாடல்களை குறிப்பிட வேண்டாம்)
என் கேள்வி,மற்ற இசையமைப்பாளர்கள் ஏன் அமிர்தவர்ஷினியைக் கண்டு தலை தெறிக்க ஓடியிருக்கிறார்கள்.?அப்படி தெறிக்காத பிறரின் பாடல்கள் ஏதேனும் இருந்தால் சாலச்சுகம்.

இன்றைய கவிதை:

வெட்டவெளியில் எறிந்த கல்லா
கண்ணாடிக்கு முன் நிகழ்த்துகிற உரையாடலா
பாதிவழியில் கலையும் இரயில் உறக்கமா
நகர்கிற வரிசையில் முன்நிற்பவனோடு
முடிந்துவிடுகிற நுழைவுச்சீட்டா
தப்புகிற நினைவின் கடைசி எழுத்தா
இன்னபிறவா
எது
நீ
*
   கவிதையை விரும்புகிறவர்களுக்கு மட்டும் ஒரு கொசுறுத்தகவல்.illusion and Reality என்றவொரு புத்தகம். 1937இல் C.Caudwell எழுதியது.மேக்மில்லன் வெளியீடு..1991 வரை பதிப்பிக்கப்பட்ட பதிப்பு என்னிடம் உள்ளது.கிடைத்தால் ரூம் போட்டாவது படித்துவிடுங்கள்.கவிதை குறித்த நிறைவானதொரு புத்தகம்.படித்துவிட்டால் தேர்த்தம் சாப்பிட்டு விட்டு சில ஆங்கில சொற்களை உரத்த குரலில் மாறி மாறி கத்தியபடியே சண்டையிடும் கிழட்டு சிங்கங்களின் இலக்கிய உரசல்களை எல்லாம் பொருட்படுத்தவே மாட்டீர்கள்..அதெல்லாம் தமாஷாகிவிடும்.

பேரன்பு
ஆத்மார்த்தி

No comments:

Post a Comment