Tuesday, January 10, 2012

வதனப்புத்தகக் கவிதைகள்

“அவர்” பற்றிய கவிதை


அவர் ரொம்ப நல்லவர்

அவர் உங்களைப் பற்றி என்னிடம் தவறாக ஒன்றும் சொல்லவில்லை
அவர் உங்களைப் பற்றி என்னிடம் தன் கருத்தென்று ஒன்றும் சொல்லவில்லை
அவர் உங்களைப் பற்றி என்னிடம் பிறர் கருத்தென்று ஒன்றும் சொல்லவில்லை.
அவர் உங்களைப் பற்றி என்னிடம் புகழ்ந்து ஒன்றும் சொல்லவில்லை.
அவர் உங்களைப் பற்றி என்னிடம் இகழ்ந்து ஒன்றும் சொல்லவில்லை.

அவர் பிறரைப் பற்றி நீங்கள் சொன்னதாய் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் என்னைப் பற்றி நீங்கள் சொன்னதாய் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை
அவர் என்னைப்பற்றி நீங்கள் புகழ்ந்து சொன்னதாய் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.
அவர் என்னைப் பற்றி நீங்கள் இகழ்ந்து சொன்னதாய் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை
அவர் என்னைப் பற்றி நீங்கள் கருதுவதாய் நீங்கள் சொன்னதாய் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.
அவர் என்னைப் பற்றிப் பிறர் கருதுவதாய் நீங்கள் சொன்னதாய் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.
அவர் யாரைப் பற்றியும் யாரும் யாரிடமும் சொன்னதாய் யாரிடமும் எதுவும் சொன்னதில்லை.

அவர் நல்லவர்
அவர் உங்களைப் போன்றே நல்லவர்
அவர் என்னைப் போன்றே நல்லவர்
அவர் நம்மெல்லாரைப் போன்றே ரொம்ப நல்லவர்.
**********************

அன்போடு அழைக்கின்றேன்

Edit
எதைப்பற்றியும் பேசாமலிருக்க வாருங்கள்.
எதைப்பற்றியும் நினைவுபடுத்தாமலிருக்க சந்திப்போம்.
எதைப்பற்றியும் ஆலோசனை சொல்லாதிருக்க கோப்பை ஏந்துவோம்
எதைப்பற்றியும் வருந்தாமலிருக்க நம் மௌனம் கசிந்துருகப்போகிறது.

மதுப்பொழுதுகள் மகத்தானவை.
மெழுகுவர்த்திகள் என்னிடமிருக்கின்றன.
மதுக்கோப்பைகளும்.

கொறிப்பதற்குத் தேவையானவற்றைக்
கொணர்வது உங்கள் விருப்பம்.
இன்னது  வேண்டும் என
எந்தத் தேர்வுமற்றது மது மீதான என் பேரன்பு.
எப்போது வேண்டுமானாலும்
காலணிகளைக் கழற்றிவைக்கிற இடத்தில்
வார்த்தைகளைக் கைவிட்டுவிட்டு
உயர்த்திய மதுக்குடுவைகளோடு உள்ளே வாருங்கள்.

மெல்லிசையோ
குளிர்காற்றோ
கதவுதட்டலோ
சமாதானமோ
கூச்சலோ
முரண்படுதலோ
ஏதுமின்றி
அமைதியானதொரு
விருந்துப்பொழுதுக்கு
அன்போடு அழைக்கிறேன்

ஒரு திரவம்
என்னைப் புணர்வதற்காகக் காத்திருத்தலில்
துவங்கிவிடுகின்றது ஒத்திகை.
கொணர்கிற மதுபோத்தல்களின்
முத்திரைஸ்டிக்கர்
கிழிக்கப்படாமல் இருந்தால் போதும்.


No comments:

Post a Comment